தமிழக சட்டசபையில், 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையானது இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. 

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஓட்டெடுப்பின்போது, தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.  இதையடுத்து, அவர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில், சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. 

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர்,  ஓ. பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இவர் அணியிலிருந்த மாஃபா பாண்டிய ராஜன் அமைச்சர் ஆனார். 

இந்த சூழ்நிலையில் தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநராக வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர்.  இதனாலேயே அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். எனவே, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் போது,பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கோரிக்கையை முன்வைத்தது.

இதனை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், திமுக-வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் விரைவாக முடிவெடுக்க வேண்டும், சபாநாயகருக்குக் காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. 

இதன்பின், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும்  கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும், சபாநாயகர் இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ன அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியது. 

இவ்வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை ஜூலை 8ம் தேதி இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

- பெ.மதலை ஆரோன்.