தமிழ் வணக்கம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘’ தமிழகத்திற்கு வருகை தருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான விசயம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு, தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. இந்தியா, தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளது.  தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்குகிறது. 


ஒரே கலாசாரம், ஒரே மொழி கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது. இந்தியாவில் தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார். தமிழர்களுக்கு  வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் பெற்றப் பெருமைகளை தமிழ்நாடு இழந்து வருகிறது. உங்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவே வந்துள்ளேன். தமிழகத்தில் நீங்கள் விரும்பும் அரசை அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.” எனப் பேசினார்