தமிழகத்தில், இந்த கல்வியாண்டு முழுக்கவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. காலவரையற்ற இந்த மூடல், கொரோனா பரவல் அச்சத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா இனி வரும் காலத்திலும் எப்போது திறக்கப்படும் என்பது நிச்சயமில்லாமல் இருக்கிறது. ஆகவே பள்ளிகள் திறக்கப்படுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இருப்பினும் கல்வியாண்டை அப்படியே விடமுடியாது என்பதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. கூடவே தமிழக அரசு சார்பில், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் நகர்புறங்களில் நடைமுறைக்கு வந்தாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது இல்லை. ஆன்ட்ராய்டு செல்போன் எல்லா மாணவர்களிமும் இல்லாத காரணத்தால் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்தால்தான் மாணவர்களுக்கு பாடங்கள் புரியும் என்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. விருப்பப்படும் மாநிலங்கள் பெற்றோர்-ஆசிரியர்களுடன் கலந்து பேசி வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதன்படி ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறப்பதற்கு தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேர்களை ஒரு வகுப்பிலும், மற்ற 20 மாணவர்களை இன்னொரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அரசு அனுமதி அளித்தால் உடனே வகுப்புகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

அரசு பள்ளிக்கூடங்களிலும் இதேபோல் நடைமுறையை பின்பற்றலாம் என்றும் கூறி வருகின்றனர். இதன்மூலம் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்றும் அக்டோபர் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பெற்றோர்- ஆசிரியர் பிரதிநிதிகளுடன் அடுத்த வாரம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு இவற்றை கொண்டு சென்று பள்ளிகள் திறக்கும் தேதியை முடிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி இப்போதே வகுப்பறையில் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னை பிரின்ஸ் கல்வி குழும தலைவர் டாக்டர் கே.வாசுதேவன் கூறுகையில், “பள்ளிக் கூடங்களை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும், அதற்கான முன் ஏற்பாடுகள் முழுஅளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு உத்தரவுக்காக காத்திருக்கிறோம். 5-ந்தேதி பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும் உடனடியாக வகுப்புகளை தொடங்கி விடுவோம்” என்றார்