சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், பாடி டெவலப்புக்கு சப்ளிமெண்ட்ஸ் கேட்ட நிலையில், “தனிப்பட்ட விருப்பத்திற்காகக் கேட்கும் உணவுகளையும், பொருள்களையும் நிச்சயம் தர அனுமதி அளிக்க முடியாது” என்று, டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், விளையாட்டில் புகழ்பெற்று அனைவராலும் அறியப்பட்ட நபராக அறியப்பட்டார்.

இப்படியான சூழ்நிலையில் தான், டெல்லியில் கொலை வழக்கில் முதலில் தலைமறைவாக இருந்து மல்யுத்த வீரர் சுஷில் குமார், கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து, வடக்கு ரயில்வே நிர்வாகம் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தது. 

அதாவது, விளையாட்டு வீரரான மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு, வடக்கு ரயில்வேயின் மூத்த வணிக மேலாளரும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் பள்ளி அளவிலான விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக சத்ரசால் விளையாட்டு அரங்கத்தின் சிறப்பு அலுவல் அதிகாரியாகவும், டெல்லி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார். 

இப்படியான நிலையில் தான், சத்ரசால் விளையாட்டு அரங்கத்தில் 23 வயது மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுஷில் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே,  சுஷில் குமார் 3 வார காலம் தலைமறைவாக இருந்த நிலையில், அதிரடியாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுஷில் குமாருடன் சேர்த்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்ட அஜய் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், சிறையிலிருக்கும் மல்யுத்த வீரர் சுஷில் குமார், டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “மல்யுத்த போட்டிக்காகத் தயாராகவிருப்பதால், ஒமேகா 3 காப்ஸ்யூல்கள், ஒர்க் அவுட் சப்ளிமெண்ட்ஸ், மல்டி விட்டமின் மாத்திரைகள் வேண்டும் என்றும், உடற்பயிற்சி பேண்ட் வேண்டும்” என்றும், கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்வீர் சிங் லம்பா, “மனுதாரர் கேட்டிருக்கும் சிறப்பு உணவுகள், உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்துமே சொந்த விருப்பத்திற்காகவே கேட்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் அவருக்கு எவ்விதமான உடல் ரீதியான பாதிப்பும் இல்லை என்றும், இப்படி அத்தியாவசிய தேவை இல்லாததை, நிச்சயம் பரிந்துரைக்க முடியாது” என்று கூறி, அவரின் கோரிக்கை மனுவை நீதிபதி முற்றிலுமாக நிராகரித்தார்.

இதனிடையே, டெல்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், அங்குள்ள ஒரு தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளார். அத்துடன், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.