கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 3-வது வாரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இருப்பினும் முகூர்த்தநாள் என்பதால் சில இடங்களில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

corono

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 9 மற்றும் 16-ம் தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் இம்மாதத்தில் 3-வது முறையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள், இணைப்பு சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் மூடப்பட்டன. இதனால் தமிழகமே முடங்கியது.

மேலும் தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி காய்கறி-மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள், ஜிம்கள், சலூன்கள், அழகு சாதன நிலையங்கள், ‘டாஸ்மாக்’ கடைகள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், உணவு அங்காடிகள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. பஸ் - மெட்ரோ ரெயில் சேவைகளும் செயல்படவில்லை. அதேவேளை ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பாலகங்கள், ஆம்புலன்சு சேவைகள், அமரர் ஊர்தி சேவைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல செயல்பட்டன.


அதனைத்தொடர்ந்து ரெயில் சேவை வழக்கம்போல இயங்கின. இதனால் எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வழக்கமான ரெயில் சேவை இருந்தது. பயணிகளின் வசதிக்காக பஸ்-ரெயில் நிலையங்களில் ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிபந்தனைகளுடன் இயக்கப்பட்டன. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டும் மீண்டும் பிரீபெய்டு ஆட்டோ சேவை இயக்கப்பட்டன. எல்லாவற்றையும் விட நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வோருக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோ மற்றும் இதர வாகனங்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.

மேலும் அந்தவகையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வோர், ஆங்காங்கே போலீசாரின் வாகன சோதனையிலும் உரிய அழைப்பிதழை காண்பித்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர். கண்ணில் சிக்குவோர் அனைவரும் அழைப்பிதழை காட்டி செல்வதால் போலீசாரும் முந்தைய ஊரடங்கை போல கண்காணிப்பில் தீவிரம் காட்டவில்லை. இதனால் வழக்கமான வாகன சோதனை நடைபெறும் இடங்களிலும் பெரியளவில் வாகன சோதனை நடைபெறவில்லை. சந்தேகப்படும் வகையில் சாலையில் செல்வோரை மட்டுமே அழைத்து போலீசார் விசாரித்தனர். இதுதவிர மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னை போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.