இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தான். உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பல தசாப்தங்களாக கொண்டவர். 70 களில் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை மக்களை பல வழிகளில் உற்சாகப்படுத்தும் தன்னிகரற்ற கலைஞன், வயது என்பது வெறும் எண்களே என்று அயராமல் உழைத்து கொண்டிருகின்றார் ரஜினி காந்த். அதன் படி இன்றும் ஆண்டுகொரு திரைப்படம் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வழக்கம் போல வசூல் மார்கெட்டில் ஹிட் அடித்தது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ மிகபிரம்மாண்டமாய் உருவாகி வரும் இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் இந்திய திரையுலகில் உச்சம் பெற்ற நடிகர்களான மோகன் லால், ஜாக்கி ஷராப், சிவ ராஜ்குமார், சுனில் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக பிரமாண்டமாய் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘பாபா’ திரைப்படத்தை மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது தொழில்நுட்ப வேலைகளை சேர்த்து புது பொலிவுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ரஜினி பிறந்தநாளுக்கு ரீ-ரிலீசாகி செய்தார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதுபொலிவுடன் வெளியான 'பாபா' திரைப்படத்தில் நிறைய மாறுதல்கள் செய்து வித்யாசமான கிளைமேக்ஸ் காட்சிகள் சேர்த்து வெளியிட்டது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி எதிர்பார்த்தபடி ரசிகர்கள் பாபா ரீ ரிலீஸை கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றியையடுத்து ரஜினி இந்த பாபா புது பொலிவு திரைப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களை சமீபத்தில் நேரில் சந்தித்தார். படத்தில் பணியாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாபா திரைப்படத்தின் நினைவு பொருளாக பாபா திருவுருவ படத்தை வழங்கினர். மேலும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் சில நேரம் கலந்துரையாடினார் இந்நிகழ்வில் பாபா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.. தற்போது இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.