தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக வலம் வந்து பின்னாளில் கதாநாயகனாக அசத்தி வரும் நட்சத்திரம் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னாளில் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். அட்டகாசமான காமெடி கவுண்டர்களினால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற மிக முக்கியமான நட்சதிரங்களின் படங்களில் சந்தானத்திற்கு தனி காமெடி டிராக் கொடுக்கப் பட்ட காலமும் இருந்தது. அந்த அளவு சந்தானத்தின் புகழ் பரவலாக விரிந்தது. மேலும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியும் வந்தார். அதன் பின் ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ திரைப்படம் மூலம் முன்னணி நடிகராக படங்களில் தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு பின் தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ ,‘தில்லுக்கு துட்டு 1,2’, ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. 15 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த சந்தானம் தற்போது மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் ‘கிக்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை கதாநாயகனாக வலம்வரும் சந்தானம் குறித்து அவருடைய சமீபத்திய திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களிடம் சந்தானம் உடனான கூட்டணி குறித்து பேசுகையில்,

அவர், " ஏ1 படத்தில் வேறு ஒரு சாதி பெண்ணை காதலித்து அந்த பெண்ணுக்காக அசைவம் சாப்பிடுவதை காதலன் விடுகிறான்.‌ இந்த சூழலில் இதுபோன்ற காட்சி வரவேற்கதக்கது. என்ன பொறுத்தவரை ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்கள் இன்றைய சூழலுக்கு தேவையான படங்கள் அரசியல் ரீதியாக அவர்கள் சொல்லும் கருத்தும் அத்யாவசியமானது. அதே நேரத்தில் இது போன்ற படங்களும் வாழ்வின் ஒரு அங்கத்தை விவரிக்கின்றது. இதுவும் மக்களை தொடர்பு படுத்தும் கதைதான். அதனால் தான் எனக்கு ஏ1 படம் ரொம்ப பிடிக்கும். வாழைப்பழம் காமெடி ஏ1 படத்தில் வரும்போது யாரும் சாதி ரீதியாக விமர்சித்து மீம்கள் பதிவிட வில்லை. ஏனென்றால் மக்கள் அதனை காமெடியாக மட்டுமே பார்த்து ரசித்தனர். அது எனக்கு பிடித்தது.

பின் பாரிஸ் ஜெயராஜ் படத்திற்காக அந்த இயக்குனர் வரும் போது என்னிடம் சொன்னார். 'இந்த படம் முழுக்க முழுக்க கானா ஆல்பம் கொண்டது' என்று, படம் முழுக்க கானா படம் வந்து ஒரு தமிழ் படம் கூட இதுவரை வந்ததில்லை. இதுதான் முதல் முறை எனக்கு அது வரபிரசாதம். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அட்டகத்தி படம் பண்ணும்போது ரஞ்சித் கானா என்றால் என்ன? அதன் வாழ்வியல் என்ன என்று எனக்கு சொல்லி கொடுத்தார். அதிலிருந்து இன்று வரை நான் நல்ல கானா பாடல்களை கொடுத்து வருகிறேன். எனக்கு அது மகிழ்ச்சியை தான் கொடுக்கிறது. எனக்கு அது தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது.” என்றார் சந்தோஷ் நாராயாணன்

சந்தானத்தின் திரைப்படங்களான ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘குலுகுலு’, ஆகிய படங்களில் இசையமைப்பாளாராக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றி பல ட்ரெண்ட்செட்டிங் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தகவல்களை சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..