தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களில் ஒருவரான G.டில்லிபாபு அவர்கள் தனது AXESS FILM FACTORY தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் திரைப்படத்தை தயாரித்த AXESS FILM FACTORY தயாரிப்பில் அடுத்து வெளிவந்த மரகத நாணயம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

குறிப்பாக முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தை AXESS FILM FACTORY தயாரித்தது. சுவாரசியமான த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றதோடு பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த வரிசையில் தயாரிப்பாளர் G.டில்லி பாபுவின் AXESS FILM FACTORY தயாரிப்பில் அடுத்த படைப்பாக தயாராகியுள்ளது மிரள் திரைப்படம். மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மிரள் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மிரள் திரைப்படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவில், கலைவாணன்.R படத்தொகுப்பு செய்ய, பிரசாத்.SN இசையமைத்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடும் மிரள் திரைப்படம் வருகிற நவம்பர் 11ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மிரள் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை அம்மா புரொடக்ஷன்ஸ் SDN BHD நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அம்மா புரொடக்ஷன்ஸ் SDN BHD நிறுவனம் மிரள் திரைப்படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து மிரள் படத்தின் வெளியிட்டு விழாவும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மிரள் படத்தின் நடிகர் - நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.