சமூக அவலங்களையும் எளிய மக்களின் வாழ்வியலையும் தன் திரைப்படங்களின் கதையில் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் திரைப்படமாக கொடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ். அதன்படி பரியேரும் பெருமாள், கர்ணன் ஆகிய அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் கவனம் பெற்றார். தன் முதல் படத்திலே ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற இவரின் அடுத்த படைப்பின் மீது தனி எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது இவர் வாழை என்ற படத்தையும் துருவ் விக்ரம் வைத்து கபடி களத்தில் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார். பின் இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் அவருடன் கூட்டணி அமைத்து திரைப்படம் இயக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இதனிடையே மாரி செல்வராஜ் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வைகை புயல் வடிவேலு மிக முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைய்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தின் அறிவிப்பிலிருந்தே இந்த படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதிகட்ட பட வேலையை முடித்த மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் யுகபாரதி வரிகரிகளில் வைகை புயல் வடிவேலு பாடியுள்ள ‘ராசா கண்ணு’ வெளியாகியுள்ளது. பாடலின் அழுத்தமான வரிகளுடன் மக்களின் வலிகளை வடிவேலு குரலின் மூலம் கொண்டு வந்த ராசா கண்ணு பாடல் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள படத்தின் சில காட்சிகள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.