தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஷீலா தனது விவாகரத்தை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் தனது Instagram பக்கத்தில், “திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன் அன்பும் நன்றியும்” என பதிவிட்டு, “வாழ்வின் இந்த தருணம் கடந்து வருகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிந்த நடிகை ஷீலா திடீரென தனது விவாகரத்தை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது விவாகரத்தை அறிவித்த நடிகை ஷீலாவின் அந்த பதிவு இதோ...

கடந்த 2016 ஆம் ஆண்டு ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வெளிவந்த ஆறாத சினம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷீலா. அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இயக்குனர் செழியன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற டூ லெட் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்த நடிகை ஷீலா, தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடித்த அசுரவதம் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அனைவரது மனதையும் கவர்ந்த நடிகை ஷீலா, அதே ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2020 இல் திரௌபதி படத்தில் நடித்த நடிகை ஷீலா பின்னர் 2021 ஆம் ஆண்டில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மண்டேலா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மண்டேலா திரைப்படம் ஷீலாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது என்றும் சொல்லலாம். தொடர்ந்து ஜோதி, மாயத்திரை, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஷீலா கடந்த நவம்பர் மாதத்தில், தீபாவளி வெளியீடாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் ஷீலா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளிவந்த பேட்டை காளி வெப்சீரிசிலும் முன்னணி கதாபாத்திரம் முன்னணி கதாபாத்திரத்தில் ஷீலா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களையும் நல்ல கதைக்களம் உள்ள திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷீலா கடந்த 2020 இல் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கூத்துப் பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் மற்றும் நடிகை ஷீலா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடுக்கடலில் நடைபெற்றது. இதனிடையே நீண்ட காலமாக நடிகை ஷீலா தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து விவாகரத்தை முடிவு செய்த ஷீலா தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக வெளி உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்.