கேரளாவில் தளபதி விஜயின் லியோ பட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காயமடைந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியின் லியோ திரைப்படம் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தை உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் கேரள மாநிலத்தில் லியோ திரைப்பட கொண்டாட்டங்கள் கலைப்பட்டிருக்கின்றன. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி 9 மணி அளவில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் கேரளா மற்றும் பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் ரசிகர்களுக்காக திறக்கப்பட்டன. அந்த வகையில் அதிகாலை 4 மணி முதல் கேரளாவில் வெளிவந்த லியோ திரைப்படம் தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

இதனிடையே கேரளாவில் உள்ள முக்கிய திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதில் முதலாவதாக கேரளாவில் பாலக்காட்டில் அமைந்திருக்கும் அரோமா தியேட்டரில் ரசிகர்களை சந்தித்தார். நட்சத்திர நாயகர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பு போன்று கிட்டத்தட்ட தளபதி விஜய் அவர்கள் வந்தால் எவ்வளவு பெரிய வரவேற்பும் ஆரவாரமும் உற்சாகமும் ரசிகர்கள் மத்தியில் இருக்குமோ அப்படி ஒரு மிகப்பெரிய வரவேற்பும் உற்சாகமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கேரளா ரசிகர்கள் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து திருச்சூரில் அமைந்திருக்கும் ராகம் தியேட்டரிலும் எர்ணாகுளத்தில் அமைந்திருக்கும் கவிதா தியேட்டர்களும் ரசிகர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால் பாலக்காடு அரோமா தியேட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை காண ரசிகர்கள் குவிந்த நிலையில் ,அந்த நெரிசலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளி வந்தது. மேலும் இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்ற இரண்டு இடங்களுக்கு செல்ல முடியாது எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில், “உங்களது அன்புக்கு நன்றி கேரளா... உங்கள் அனைவரையும் பாலக்காட்டில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த கூட்ட நெரிசலில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்ற இரண்டு இடங்களிலும் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் மீண்டும் கேரளாவிற்கு வந்து உங்கள் அனைவரையும் நிச்சயம் சந்திக்கிறேன். அதுவரை இதே அன்போடு லியோ திரைப்படத்தை கொண்டாடுங்கள்.” என பதிவிட்டு, பாலக்காடு அரோமா திரையரங்கில் ரசிகர்களோடு எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்களின் அன்பு நெரிசலில் சிக்கிக் கொண்டு காயமடைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் மீண்டு வர வேண்டும் என கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது. கேரளாவில் ரசிகர்களை சந்தித்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அந்த பதிவு இதோ...