தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் ஒரே நேரத்தில் இசையமைப்பாளராக பிஸியாக பணியாற்றி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். பல ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தனித்துவமான இசையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜிவி பிரகாஷ் குமார் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, சுதா கொங்கராவின் சூரரை போற்று இந்தி ரீமேக், பா ரஞ்சித் சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’, ஜெயம் ரவியின் ‘சைரன்’, இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK21’ போன்ற பல முக்கிய திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் ஒப்பந்தாமகியுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

இதனிடையே ஜிவி பிரகாஷ் இசையமைகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா முதல் முறையாக இயக்குனராக களமிறங்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, ஆகியோர் நடித்து வருகின்றனர். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏஆர் சூர்யா ஒளிப்பதிவு செய்ய தியாகு படத்திற்கு படத்தொகுப்பு செய்து வருகிறார்.

பழனி அருகே இப்படத்தின் படபிடிப்பு மும்முரமாக நடைபெற்று கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டுயுள்ள நிலையில் படத்தில் இசையமைப்பாளரை மாற்றியுள்ளது படக்குழு. முன்னதாக ஜிவி பிரகாஷ் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மார்கழி திங்கள் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இது குறித்து இயக்குனரும் நடிகருமான பாரதி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இளையராஜாவை நேரில் சந்தித்து புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன். “இயக்குனர் திரு.சுசீந்திரன் தயாரிப்பில், என் மகன் திரு.மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் என் உயிர் தோழன் திரு.இளையராஜாவும்.. நானும் மார்கழி திங்களில் இணைவதில் பெருமை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாரதி ராஜா – இளையராஜா கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைவது குறித்து ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் பாரதி ராஜா கூட்டணி இல்லாமல் இந்த முறை நடிகர் பாரதி ராஜா என்ற கூட்டணியில் இணைவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மாற்றப் பட்டது குறித்து ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். ஜிவி பிரகாஷ் தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றி வருவதால் இப்படத்தில் பணியாற்ற முடியாமல் இருந்திருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.