சொல்லிசை எனப்படும் ராப் பாடல்கள் தமிழில் பரிச்சயமாக்கிய ஜாம்பவான் யோகி பி. புதுபுது அடுக்கு மொழி வரிகளில் சொல்லிசையில் அசாத்ய பாடல்களை கொடுத்து கவனம் பெற்றவர் யோகி பி. 90களில் பிறந்தவர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்காமல் இருக்க மாட்டார்கள். 2000 ஆண்டுகளில் வெளிவந்த பல சொல்லிசை பாடல்கள் இவரிடமிருந்தும் அல்லது இவரது குழுவிடம் இருந்தும் தான் வெளியானது. "மடை திறந்து" என்று இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடலை அட்டகாசமாக ரீமிக்ஸ் செய்து உலக தமிழர் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதன்பின் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தில் பிரபல பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்விஸ்வநாதனின் இசையில் வெளியான "எங்கேயும் எப்போதும்' பாடலை ரீமிக்ஸ் செய்து எஸ் பி பாலசுப்பிரமணியம் உடன் இணைந்து பாடி அசத்தியிருப்பார். அந்த பாடல் ஒலிக்காத இடமே இல்லை. இன்றும் பல பொழுதபோக்கு நிகழ்வுகளில் அந்த பாடல் ஒலித்து கொண்டு தான் இருக்கின்றது. பின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் ஒரு பாடலை எழுதி பாடியிருப்பார். பின் ஆடுகளம் படத்தில் 'போராடினால்' பாடல் பிரபலமானது.

அதன்பின் அவரது சொல்லிசை நீண்ட நாள் பிறகு அனிரூத் இசையில் விவேகம் படத்தில் இடம்பெற்றது. நீண்ட காலம் கழித்து மீண்டும் திரைத்துறையில் வந்தாலும் அதே ஆர்பரிப்பை ரசிகர்கள் அவரது குரலுக்கு கொடுத்தார்கள். அவரது குரல் தொடர்ந்து புகழ்பெற்று கொண்டே இருந்தது.

தற்போது நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் கலந்து கொண்ட அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் குருவி படத்தில் பாடலை பாடி விஜய் மற்றும் திரிஷாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், "பொதுவாகவே நான் மற்றும் எனது குழுவினர் எல்லாம் விஜய் சாருடைய தீவிர ரசிகர்கள். மலேசியா ஒரு நிகழ்ச்சிக்காக போய் கொண்டிருக்கும் போது தரணி சார் கால் பண்ணி குருவி படத்தில் ராப் பண்ணனும் னு கேட்டார். அதன்பின் தரணி சார் பார்த்து பேசுனோம். வித்யாசாகர் இசையில் உருவான பாடலில் நாங்கள் ராப் அமைத்தோம். எங்க பாட்டு கேட்டு தரணி சார் அடிக்கடி குதூகலத்தில் குதிப்பார். பாட்டு முடிஞ்சு பாடலை படமாக்க திட்டமாக்கினாங்க..பாடல் படமாக்கப்படும் போது எங்களையும் நடிக்க சொன்னார்கள். எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அந்த படத்தை நான் வாழ்க்கையில் மறக்கமாட்டேன்.‌பிரம்மாண்டமான படக்குழு அது" என்றார் மேலும் தொடர்ந்து "விஜய் சார் வேலையில் குறிக்கோளாக இருக்கும்போது அவர் அந்த கதாபாத்திரத்திலே தான் இருப்பாரு. படப்பிடிப்பு தளங்களில் கதாபாத்திரத்திலே இருப்பார். விஜய் சார் ஜிம் முடிஞ்சு சாப்பிட வராரு.. அவர் டான்ஸ் ஸ்டெப் லாம் அப்பவும் பிடிச்சு பண்ணுவாரு. அந்த படப்பிடிப்பு தளத்தில் ஓய்வுக்காக ஒரு சின்ன‌ மேட் போட்டு படுத்திட்டாரு. அவருக்கு கிடைத்த இடைவேளை நேரத்திலுமீ எங்களிடம் வந்து நலம் விசாரித்தார்" என்றார் பிரபல சொல்லிசை பாடகர் யோகி பி.

மேலும் பல பிரபல சுவாரஸ்யமான தகவல்களை பிரபல தமிழ் சொல்லிசை கலைஞர் யோகி பி நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியின் முழு வீடியோ இதோ..