தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமானாலும் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்றவர். தொடர்ந்து இரண்டு சீசன்களில் மீனாட்சியாக நடித்து மிகப்பெரிய புகழ் உச்சத்தை பெற்றவர் ரச்சிதா. சின்னத்திரையில் அதிகளவு ரசிகர்கள் கொண்ட பிரபலங்களில் ஒருவராக ரச்சிதா இருந்தார். மேலும் வெள்ளிதிரையிலும் கதாநாயகியாக ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா. யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார், அந்நிகழ்ச்சியில் தனித்துவமாக இருந்த ரச்சிதாவிற்கு வெளியில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

அதன் படி நமது கலாட்டா தமிழ் மீடியா “மக்களின் star ரச்சிதா” என்ற பெயரில் fans meet ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான ரசிகர்கள் வருகை தந்து தங்களின் அன்பையும் வரவேற்பையும் ரச்சித்தாவிற்கு வழங்கினார்.

பேட்டியின் இடையில் பிரபல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 போட்டியாளருமான மும்தாஜ் அவர்கள் சர்ப்ரைஸாக வருகை தந்திருந்தார். மும்தாஜ் வருகையில் ஆச்சர்யமடைந்த ரச்சிதா "நான் இவரை பிக் பாஸில் இருக்கும்போதே எதிர்பார்த்து கொண்டிருந்தேன். வெளியில் வந்த பின்பு தான் தெரியும் இவரிடம்‌ யாரும் தெரியப்படுத்தவில்லை என்று.. நீங்க வந்தது எனக்கு ஆச்சர்யமா இருக்கு.. நீங்க வந்ததற்கு நன்றி" என்று தெரிவித்து ஆச்சர்யத்துடன் நெகிழ்ந்தார். அதனை தொடர்ந்து மும்தாஜ் "நன்றி சொல்லாதே.. உனக்காக எந்த நேரத்திலும் எப்போதும் வருவேன். அது நடுராத்திரியாக இருந்தாலும்" என்றார்.

மேலும் உங்களை அம்மா என்று ரச்சிதா அழைக்கிறார் ஏன் என்ற கேள்விக்கு மும்தாஜ், "வயது அடிப்படையில் அவள் அழைக்கவில்லை. அவள் என் குணத்தை பார்த்து அப்படி அழைக்கிறாள்.எனக்கு ரொம்ப அம்மாதனமான விஷயங்கள் அதிகமாக இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜனனி, ரம்யா அப்படி அழைக்க ஆரம்பித்தார்கள்.‌ அதன்பின் ரச்சிதாவும் அப்படி அழைக்க ஆரம்பித்து விட்டார். நானும் எனக்கு அதை அனுமதியளித்துவிட்டேன். என்னுடைய குணத்தில் அந்த தாய்மை உணர்வு இருக்கு" என்றார் மும்தாஜ்.

மேலும் அவரை தொடர்ந்து ரச்சிதா, "பிக் பாஸ் பார்க்கும்போது நான் மும்தாஜ் அவர்களை அதிகமாக ஆதரித்தேன். அதன்பின் அண்ணா அழைத்து நன்றி தெரிவித்தார்.‌அப்படியே எனக்கும் மும்தாஜ்க்கும் இடையேயான உறவு தொடங்கியது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்ப வாரத்தில் நான் மும்தாஜ் அவர்களின் வருகையை எதிர்பார்த்தேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அவர்களிடம் தெரியப்படுத்தவில்லை என்பது வெளியில் வந்தபோது தான் எனக்கு தெரிந்தது. அப்படி தெரியப்படுத்தியிருந்தால் அவர்கள் நிச்சயமாக வந்திருப்பார்கள்" என்றார் ரச்சிதா.

அதற்கு மும்தாஜ் "நிச்சயம் நான் வந்திருப்பேன். அது 24/7 நிகழ்ச்சியில் ரச்சிதா உங்களை எதிர்பார்த்திருந்தார் என்று ஒருவர் என்னிடம் சொல்லியிருந்தார்.ஆனால் என்னை யாரும் அழைக்கவில்லை" என்றார்.

மேலும் ரச்சிதா - மும்தாஜ் இடையிலான நெகிழ்ச்சி பூர்வமான உரையாடல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..