பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய காதல் மன்னன் கண்ணனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கரூர் பாலவிடுதி அடுத்துள்ள களுத்தரிக்காப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பானுமதி, புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணனை, கடந்த 7 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, பானுமதி வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு, கண்ணனும்சம்மதம் தெரிவித்த நிலையில், திருமண ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, பானுமதி வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்துள்ளது.

இதனிடையே, பானுமதிக்கு போன் செய்த கண்ணன், திருமண ஏற்பாடுகளை நிறுத்தும்படி கூறியுள்ளான். காரணம் கேட்டதற்கு, எதுவும் சொல்லாம், பானுமதியிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பானுமதிக்கு, கண்ணன் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கண்ணன் பற்றி வெளியே விசாரித்துள்ளார். அப்போது, கண்ணனைப் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது கண்ணனுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது
தெரியவந்தது.

மேலும், ஒரே நேரத்தில் பல பெண்களைக் காதலித்து வந்த கண்ணன், பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் பணம், பொருள் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பானுமதி, கண்ணனின் தன்னை காதலித்து ஏமாற்றியது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்த வழக்குப் பதிவு செய்த போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே காதல் என்னும் பெயரில், காதல் மன்னன் கண்ணன், ஒரே நேரத்தில் பல பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.