8 வயது சிறுமிக்கு 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில், தனது மனைவி மற்றும் 8 வயது மகளுடன் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, இஸ்மாயிலின் 8 வயது மகள், அவ்வப்போது அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு உதவி கேட்டுச் செல்வதாகத் தெரிகிறது.

அப்படி உதவி கேட்டு செல்லும்போது, கடந்த சில நாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த 75 வயதான முகமது நூகு, 66 வயதான அப்துல் ஜாபர், 53 வயதான ஜாகீர் உசேன், 52 வயதான சகாய தாசன் உட்பட மேலும் 2 சிறுவர்கள் என மொத்தம் 6 பேர், சிறுமியிடம் அத்துமீறித் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவால் ஏற்படும் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல், தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அப்பகுதியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த 2 சிறுவர்கள் உட்பட 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, சிறுவர்கள் 2 பேரும் நெல்லை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்ற 4 பேரும் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.