தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் நடப்பு ஆண்டில் தமிழகத்தில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. இதன்படி சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இதேபோன்று தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்து உள்ளது.