மேடையில் மீண்டும் கண்ணீர் விட்டு நடிகர் சூர்யா உணர்ச்சிவசப்பட்டு அழுத நிகழ்வு, காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாகக் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் விழா ஒன்று, மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

இதில் நடிகர் சூர்யா, அவரது தந்தை நடிகர் சிவக்குமார், அவரது சகோதரர் நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல், அகரம் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் 3 ஆயிரம் மாணவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் முதலாவதாகப் பேசிய நடிகர் சிவக்குமார், “எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும், அகரம் தான் சூர்யாவின் அடையாளம்” என்று பெருமையோடு குறிப்பிட்டார். அதேபோல், “உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம்” என்றும் தன் பிள்ளைகளின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

தந்தையைத் தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, “தன்னை யாருடனாவது ஒப்பிடும் தவறான பழக்கம் தனக்கு இருந்ததாகவும்.. ஆனால், அப்படி இருக்கக் கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார். “நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை, நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்”என்றும் மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஊட்டினார்.

கடைசியாகப் பேசிய நடிகர் சூர்யா, கலகலப்பாகச் சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினார். பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது, அறக்கட்டளையின் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ என்பவரைப் பாராட்டிப் பேசியபடியே, அவரது மகனைக் கட்டியணைத்துக் கண்கலங்கினார். நடிகர் சூர்யா கண்கலங்கியதைப் பார்த்தவர்களும், கண்கலங்கி அழுதார்கள். இதனால், அந்த விழாவின் தருணங்கள் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.