குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 10 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில், முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்தவர்களில், 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது.

TN Group 4 exam controversy, CBCID investigate

குறிப்பிட்ட இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாகபோலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு புகாரில் சிக்கிய 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தேர்வு எழுத வாழ்நாள் தடை நேற்று விதிக்கப்பட்டது.

அத்துடன், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேர் மீதும், 14 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

TN Group 4 exam controversy, CBCID investigate

மேலும், கைதான 3 பேரும், பிப்ரவரி 7 ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நீதிமன்றக் காவலில் இருக்கும் 3 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, கடலூரில் மேலும் ஒரு இடைத்தரகரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

அத்துடன், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 10 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், இந்த முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பிலிருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. 

அதேபோல், குரூப்-4 தேர்வில் கீழ்க்கரை, ராமேஸ்வரம் மையங்கள் தவிர வேறு எங்கும் முறைகேடு நடைபெறவில்லை என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.