பாலியல் வழக்கு.. நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு!
By Aruvi | Galatta | 04:15 PM
நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்ச்சைகளுக்குப் பெயர் போன மனிதர் யார் என்றால், யோசிக்காமல் சொல்லி விடலாம்.. அவர் பெயர் நித்தியானந்தா என்று...
நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதும், பின்பு மறைவதும் ஒன்றும் புதிதான விசயமல்ல.
பெங்களூரைச் சேர்ந்த பெற்றோர், நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்த தங்களது 2 பெண் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்று, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பான வழக்கில், நித்தியானந்தாவைக் குஜராத் மற்றும் பெங்களூர் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அத்துடன், நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் நேற்று பிறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த காலத்தில் பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அவருடைய முன்னாள் சீடர் லெனின் புதிதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு வாரக் காலத்திற்குள் இது தொடர்பாக நித்தியானந்தா பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக, கர்நாடக போலீசாரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், நித்தியானந்தாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.