17 வயது சிறுமியை கடத்தி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த ஏற்கனவே திருமணமான இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி, குடும்பம் இருக்கிறது.

மணிகண்டன் வேலைக்குச் சென்ற இடத்தில், அங்குள்ள பொட்டிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மணிகண்டனுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனிடையே, தன் மகளை மயக்கி, மணிகண்டன் கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மணிகண்டனை கடந்த 3 மாதங்களாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்ற மணிகண்டன், தற்போது கேரளாவில் இருப்பதாகவும், அங்கு சிறுமியை கடந்த 3 மாதங்களாக, மறைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். அத்துடன், மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, மணிகண்டன் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும், மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருப்பது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், மணிகண்டன் மீது போக்சோ, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.