அடுத்த குறி ஆஸ்கார் தான்... முன்னணி ஹாலிவுட் இயக்குனர்களை பின்னுக்கு தள்ளி விருது வென்ற SSராஜமௌலி!
By Anand S | Galatta | December 03, 2022 11:17 AM IST
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா & நான் ஈ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வெளிவந்த பாகுபலி 1&2 திரைப்படங்கள் இந்தியளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வரிதையில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR.
கடந்த மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸான RRR திரைப்படம் பல கோடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹாட்டானதோடு 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் அனைவரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது அந்த வகையில் அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுகளில் அனைத்து பிரிவுகளிலும் RRR திரைப்படத்தை படக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். எனவே இந்த முறை ஆஸ்கார் விருதுகளை இந்திய சினிமாவில் இருந்து ஆவலோடு எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற நியூயார்க் ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் சிறந்த இயக்குனர் விருதை RRR திரைப்படத்திற்காக இயக்குனர் S.S.ராஜமௌலி வென்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் உட்பட பல முன்னணி ஹாலிவுட் இயக்குனர்களோடு போட்டியிட்டு S.S.ராஜமௌலி சிறந்த இயக்குனர் விருது வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.