தற்போதைய இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பிரம்மிப்பான படைப்புகளை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரிட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் இயக்குனர் SS.ராஜமௌலி. தனது முந்தைய படங்களான நான் ஈ , பாகுபலி 1&2 ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் SS.ராஜமௌலி தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்கிய RRR திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்தது. DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்து உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து சமீபத்தில் ஜப்பானில் ரிலீசான RRR திரைப்படம் அங்கும் வசூல் சாதனையை படைத்தது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR படத்தில், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக அளவில் பல சர்வதேச விருதுகளை வென்று குவித்து வரும் RRR திரைப்படம், உலக சினிமாவில் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் வென்றது. RRR திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் MM.கீரவாணி கைப்பற்றினார்.
மேலும் ஹாலிவுட் க்ரிடிக்ஸ் அசோசியேசன் ஃபிலிம் அவார்ட்ஸ் எனும் சர்வதேச விருது விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் RRR படம் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி லாஸ் ஏன்ஜலஸில் நடைபெற்ற விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம், சிறந்த ஸ்டண்ட் மற்றும் சிறந்த பாடல் (நாட்டு நாட்டு பாடல்) என நான்கு விருதுகளை RRR திரைப்படம் தட்டி சென்றது. இந்த விருது விழாவில் இயக்குனர் SS.ராஜமௌலி நடிகர் ராம் சரண் மற்றும் இசையமைப்பாளர் MM.கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த வரிசையில் அடுத்ததாக ஒட்டு மொத்த உலக சினிமா கலைஞர்களுக்கும் கனவு விருதாக திகழும் ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியலிலும் RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருது விழாவில் கட்டாயமாக நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்கும் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்கார் மேடையை RRR படக்குழுவினர் அலங்கரிக்கவுள்ள அறிவிப்பு தற்போது வெளியானது. ஆம் முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ஆஸ்கார் விருதுகள் வென்ற சமயத்தில் ஆஸ்கார் மேடையில் ஜெய் ஹோ பாடலை பாடியது போலவே, நடைபெறவிருக்கும் இந்த ஆஸ்கார் விருது விழா மேடையில் பாடகர் கால பைரவா மற்றும் பாடகர் ராகுல் சிப்பிலிக்குஞ் ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை பாட உள்ளனர் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அந்த அசத்தலான அறிவிப்பு இதோ…
Rahul Sipligunj and Kaala Bhairava. “Naatu Naatu." LIVE at the 95th Oscars.
— The Academy (@TheAcademy) February 28, 2023
Tune into ABC to watch the Oscars LIVE on Sunday, March 12th at 8e/5p! #Oscars95 pic.twitter.com/8FC7gJQbJs