தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற்ற பா.ரஞ்சித் அடுத்தடுத்து கபாலி மற்றும் காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார். முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த ஆண்டு ரிலீஸாகி அனைவராலும் ரசிக்கப்பட்டதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 

இதனிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. 

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நேரடி பாலிவுட் திரைப்படமாக தயாராகும் பிர்ஸா படத்தின் முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிர்ஸா முண்டா எனும் இந்திய பழங்குடியின மக்களை சார்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகும் உருவாக உள்ள பிர்ஸா திரைப்படத்தை ஷரீன் மந்த்ரி மற்றும் கிஷோர் அரோகரா இணைந்து நாமா பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.