தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970-80களில் வடசென்னையில் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி திரைப்படம் அடுத்து திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் சுந்தர்.சி-யின் அரண்மனை-3 படத்திலும் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா, ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா எனும் இளம் பெண்ணை ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது இளம் பெண் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி தனது தரப்பு நியாயங்களை பதிவு செய்தார்.

இதனிடையே தற்போது ஆர்யா போல் பேசி இளம் பெண்ணை ஏமாற்றிய இரண்டு நபர்களை மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் ஆர்யா, “வெளியில் சொல்ல முடியாத அளவிலான மன உளைச்சலை கொடுத்த இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை போலீஸ் கமிஷனர் ,மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசார் அனைவருக்கும் நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.