அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி 63 வயதான விஜயலட்சுமி, கடந்த 2 வாரங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். 

இதனையடுத்து, அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

63 வயதான விஜயலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.  

பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி அவருக்கு மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக,  விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

அப்போது,  ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறியதுடன், அவரது மகன்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர் தெரிவித்தார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முக்கியமாக, அங்கே அழுத படி அமர்ந்திருந்த  ஓ.பன்னீர் செல்வத்தின் அருகில் அமர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவரது கையை பிடித்துக்கொண்டு, அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, ஓபிஎஸ் கதறி அழுதார்.
 
அத்துடன், விஜயலட்சுமி உடல் இன்னும் சில மணி நேரங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு, சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்படுகின்றன.

முன்னதாக, ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி உயிரிழந்தார். அதன் தொடர்ச்சியாகவே, ஓபிஎஸ் மனைவி தற்போது உயிரிழந்து உள்ளது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.