“அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா சென்றால் ஜெயலலிதா ஆகிவிட முடியுமா? என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றையும் அளித்து உள்ளார்.

அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்ததோடு, கடந்த 16 ஆம் தேதி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முககியமாக, அடுத்த நாள் எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை தியாகராய நகர் வீட்டில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதொடு, பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தது அதிமுகவில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து உள்ளேன்” என்று, குறிப்பிட்டு, “அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன்” என்றும், சசிகலா வெளிப்படையாகவே பேசினார். 

இந்த நிலையில் தான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் சேர்ந்து சசிகலா மீது, மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளித்தனர். 

அந்த புகார் மனுவில், “சசிகலா தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவின் கொடியையும், அதிமுகவின் பொதுச் செயலாளர் பெயரையும் தவறான எண்ணத்தோடு பயன்படுத்தி வருகிறார்” என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர். 

இதனையடுத்து இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக என்ற கட்சி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது என்றும், தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்” என்றும், குறிப்பிட்டார்.

“அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர்களிடம் தான் கட்சிக்கு உரிமை உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது என்றும், ஆனால் கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்” என்றும், பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், “சசிகலா, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வில்லை என்றும், அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், திமுகவும்  சசிகலாவும் இணைந்து உள்ளனர்” என்றும், பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார்.

முக்கியமாக, “சசிகலாவிற்கு திமுக உதவுகிறது” என்றும், ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

இதனிடையே, சசிகலா மீது காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளது, அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.