சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கால் வருமானம் ஏதுமில்லை என்று கூறி சொத்துவரி விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றப் படியேறினார் ரஜினி. நீதிமன்றத்தில் ரஜினி தாக்கல் செய்திருந்த மனுவில், மாநகராட்சி சட்டவிதிகளின்படி, 30 நாள்கள் கட்டடம் மூடப்பட்டிருந்தாலே வரியில் 50 சதவிகிதம் சலுகை பெற உரிமை இருக்கிறது.

இந்த சலுகையைக் கேட்டு செப்டம்பர் 23-ம் தேதியே மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இதுவரை அந்த நோட்டீஸ் பரிசீலிக்கப்படவில்லை. இந்தநிலையில், சொத்துவரியாக ரூ.6.5 லட்ச ரூபாயை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிடில் இரண்டு சதவிகித அபராதத்துடன் வரி செலுத்த நேரிடும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. 

இதனால், அந்த நோட்டீஸைப் பரிசீலித்து முடிவு எடுக்கும்வரை சொத்துவரிக்கு அபராதம் விதிக்கும் முடிவை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்’ என ரஜினி குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ரஜினி தரப்பை நீதிபதி கடுமையாகக் கண்டித்தார். செப்டம்பர் 23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பிவிட்டு, அதைப் பரிசீலிக்க மாநகராட்சிக்கு நேரம் கொடுக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதற்குள் அவசர அவசரமாக நீதிமன்றம் வந்தது ஏன் என்றும் ரஜினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டாராம். 

மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என ரஜினி தரப்பைக் கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தது. இதையடுத்து, அந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் ரஜினி.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம் என பதிவு செய்துள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

ஹைதராபாத்தில் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது என கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, குஷ்பு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.