கே.ஜி.எஃப். படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் யஷ். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. 25 வயதான அவர் யஷின் தீவிர ரசிகர் ஆவார். ராமகிருஷ்ணா தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்.

அந்த கடிதத்தில் ராமகிருஷ்ணா கூறியிருந்ததாவது, நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டேன். அம்மாவுக்கு நல்ல மகனாக இருக்க முடியவில்லை. அண்ணனுக்கு நல்ல தம்பியாக இருக்க முடியவில்லை. காதலிலும் வெற்றி பெற முடியவில்லை.

வாழ்க்கையில் சாதிக்க ஒன்றும் இல்லை. அதனால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன். அவர்கள் இருவரும் என் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் கடைசி ஆசை என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமகிருஷ்ணா இறந்தது குறித்து தன் அதிருப்தியை யஷ் ட்வீட்டரில் தெரிவித்தார்.

கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த அந்த ட்வீட்டில் யஷ் கூறியிருந்ததாவது, ரசிகர்கள் அன்பு தான் எங்கள் வாழ்க்கை, எங்கள் பெருமை. ஆனால் மாண்டியா ராமகிருஷ்ணாவின் அன்பால் பெருமைப்பட முடியுமா?. இது ரசிகர்களின் அன்புக்கு உதாரணமாகிவிடக் கூடாது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வது தவறு என்று கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தராமையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ராமகிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

யஷின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, ராமகிருஷ்ணா போன்று யாரும் அவசரப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ராமகிருஷ்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.