கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர வைரஸ் அழியவில்லை. இந்நிலையில் தான் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சூர்யா கடந்த 7ம் தேதி ட்வீட் செய்தார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்ததாவது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து சூர்யா பத்திரமாக வீடு திரும்பி விட்டார் என்று கார்த்தி கடந்த 11ம் தேதி தெரிவித்தார். வீடு திரும்பினாலும் சில நாட்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்றார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு பரிசோதனை செய்தபோது கொரோனோ பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்திருப்பதாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டைரக்டர் ராஜசேகர் பாண்டியன் ட்வீட் செய்திருக்கிறார். சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், இப்போ தான் நிம்மதியாக இருக்கிறது. இது போதும். சிங்கம் திரும்பி வந்துடுச்சு. காலையிலேயே நல்ல நியூஸ் சொல்லியிருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் கடந்த 15ம் தேதி பூஜையுடன் துவங்கியது. பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி. இமான், ஹீரோயின் ப்ரியங்கா அருள்மோகன், சத்யராஜ் உள்ளிட்டோர் பூஜையில் கலந்து கொண்டார். தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால் சூர்யா பூஜையில் கலந்து கொள்ளவில்லை.

அவர் மார்ச் மாத துவக்கத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் ஆன குஷியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.