தமிழ் சினிமா ரசிகர்கள் தல என கொண்டாடும் நடிகர் அஜித்குமார் திரைப்பயணத்தில் ஐம்பதாவது திரைப்படமாக வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் மங்காத்தா. மங்காத்தா படத்தில் காவல்துறை அதிகாரியாக தல அஜித்தின் மாஸ்ஸான ஓபனிங் காட்சியில்  ரசிகர்களின் சத்தத்தில் திரையரங்கங்கள் அதிர்ந்தது.

இயக்குனர் வெங்கட்பிரபு எழுதி இயக்கிய மங்காத்தா திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்களின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் அந்த காலகட்டத்தில் பலரது ரிங்டோனாக ஒலித்தது, இன்றும் ஒலிக்கிறது.

மங்காத்தா திரைப்படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வில்லனாக ஒரு புறம் தல அஜித்குமார் மிரட்ட மறுபுறம் ஆக்சன் கிங் அர்ஜுன் அதிரடி காட்டினார். மேலும் நடிகை த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா இவர்களோடு நடிகர்கள் வைபவ், அஸ்வின், பிரேம்ஜி அமரன், ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்த மங்காத்தா திரைப்படத்தின் பார்ட்-2-விற்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இதுகுறித்து ருசிகர தகவலைப் பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் எந்த திரைப்படம் உடனடியாக இரண்டாம் பாகம் தயாராக வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா என பதிலளித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவே மங்காத்தா-2 குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் விரைவில் மங்காத்தா-2 தயாராகலாம் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.