ஜே.கே. பஜாஜ், எம்.டி.ஸ்ரீநிவாஸ் எழுதிய "Making of a Hindu Patriot: Background of Gandhiji's Hind Swaraj", என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். இந்த நிகழ்வில் பேசிய அவர், ‘’ காந்திஜீயை நாங்கள் அபகரிக்க முயல்கிறோம் என்ற கருத்து இருக்கிறது. அது தவறானது. காந்தி ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவர் போன்றவர்களையெல்லாம் யாரும் அபகரிக்க முடியாது.

இந்த நூல் மகாத்மா காந்தி பற்றி ஆய்வுபூர்வமான தகவல்களுடன் எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் இந்த தகவல்கள் சென்றடைய வேண்டும். 


காந்தியைப் பொறுத்தவரையில் அவரது தர்மத்திலிருந்து தான் அவரது நாட்டுப்பற்று உருவாகிறது. தர்மம் என்பது வெறும் மதம் சம்பந்தப்பட்டதல்ல, மதத்தையும் விட பரந்துபட்டது. தெளிவாக சொன்னால், தாய்மண் மீதான பற்று அவரது ஆன்மீகத்திலிருந்து உருவாவது.

இந்து மதம் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துகிறது. வேறுபாடுகள் என்பது பிரிவினை அல்ல. மேலும் இந்து மதம் மதங்களுக்கெல்லாம் மதம் என்றார் காந்திஜீ.


நாட்டுப்பற்று என்பது இந்துக்க்களின் அடிப்படை இயல்பு, குணாம்சம். ஒருவர் ஹிந்து என்றால் அவருக்கு தேசப்பற்றை தனியாக சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஹிந்துக்களிடத்தில் இயல்பாகவே தேசப்பற்று இருக்கிறது.

சில வேளைகளில் அவர்களது நாட்டுப்பற்றை தட்டி எழுப்ப வேண்டியிருக்கும், ஆனால் ஒரு இந்துவாக இருப்பவன் இந்தியாவுக்கு எதிராக இருக்க முடியாது. மண் மட்டுமல்ல அது அந்நாட்டு மக்கள், நதிகள், பண்பாடு, மரபுகள், அனைத்தையும் நேசிப்பதுதான் நாட்டுப்பற்று” என்றார் மோகன் பகவத்.