கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எப்படியாவது நாம் முதலில் கொரோனாவுக்கு தடுப்பூசியினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். யார் முதலில் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பார்கள் என்று உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, இப்பொழுது ரஷ்யா உலகிற்கு முதலில் கொரோனாவிற்க்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
 
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த காமலேயா என்ற நிறுவனம் கொரோனாவை குணமாக்க மருந்தை கண்டுபிடித்து, உலகிற்கு அதை முதலில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யா உலக சுகாதார நிறுவனத்திடம், இந்த தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை. அதனால் உலக சுகாதார நிறுவனம், ரஷ்யாவை கடுமையாக கண்டித்திருந்தது. `கொஞ்சமேனும் விதிமுறைகளை பின்பற்றுங்கள்' என்கிற தொணியில் இதை பதிவு செய்தது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் போன்ற நாடுகளும் இறுதி நிலையில் நாங்கள் இருக்கிறோம் என தொடர்ந்து கூறி வருகிறது. ஃபைசர், மாடர்னா, மெர்க் ஆகிய நிறுவனங்கள், முன்னிலையில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் நிறுவனங்களில் முக்கியமானவை. இவை, தடுப்பூசிகளை லாபத்துக்கு விற்க முயற்சி செய்து வருகிறதென்ற குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது. அதே வேளையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தன் தடுப்பூசியை 10 டாலர்களுக்குக் கொண்டு வரப்போவதாகவும் ‘இது அவசரகால பெருந்தொற்று பயன்பாடுகளுக்கே’ என்றும் தெரிவிப்பதாக ஆங்கில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

எதுவாகினும், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த பிறகே, முழுமையான பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் முறையான அனுமதிக்கு முன்பே பணக்கார நாடுகள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் கொள்முதலுக்கு முந்தைய உடன்படிக்கைகளில் இறங்கியுள்ளன. என்பது, பலகட்ட விமர்சனங்களை பெற்றுவருகிறது. இப்படி தடுப்பூசியை லாப நோக்கத்தில் தயாரிக்க முனைவது, ‘வேக்ஸின் நேஷனலிசம்’ என்று மருத்துவ துறையில் வழங்கப்படுகிறது. `இது மிகவும் மோசமான, ஆபத்தான போக்காக மாறும்' என்று நிபுணர்கள் சிலர் இப்போதே கண்டித்துள்ளனர்.

நிபுணர்களோடு உலக சுகாதார நிறுவனத்தினறும் தற்போது இணைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேனாம் கூறும்போது, ``இது நிச்சயம் மக்களுக்கு கேடுகளையே தரும். உலகம் இப்போது கொரோனாவுக்கான உடனடி தீர்வை எதிர்நோக்கி உள்ளது. வேகமாக நோயை குணப்படுத்தும் ஒரு தடுப்பு மருந்து, இப்போது உடனடி தேவை. ஆனால், இதில் லாபநோக்கத்தை எதிர்பார்ப்பது தவறு. உலகமயமாதல் என்பது பற்றிய சரியான புரிதல், இப்படியான சூழலில் நிறைய தேவைப்படுகிறது. 

லாப நோக்கத்தோடு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்ன செய்வார்கள்?

சேவை மனப்பான்மை இருந்தால்தான் குறைந்த விலையில் இந்த மருந்தை விற்க வேண்டும் என்றில்லை. இங்கு சேவை என்ற பேச்சுக்கு இடமில்லை. இங்கு தேவை என்பது மட்டுமே உண்மை. ஒருவேளை அதிக விலை காரணமாக, குறிப்பிட்ட மக்கள் மருந்தை பெறாமல் போனால், விளைவை அவர்கள் மட்டும் சந்திக்க போவதில்லை. நீங்களும்தான் சந்திக்க போகின்றீர்கள். ஏனெனில், மருந்தை பெறாதவர்கள், நோயை அவர்களே அறியாமல் பரப்புவார்கள். உலகம் முழுக்க, கொரோனா நீடித்துக் கொண்டே இருக்கும். உலகம் என்பது என்ன? நாம் எல்லோரும் இருப்பதுதானே! எனில், உங்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்றுதான் பொருள்!

ஆகவே பேதங்களை மறந்து, அனைத்து நாட்டின் தலைவர்களும் இணைந்து, கண்டறியப்படவிருக்கும் தடுப்பு மருந்தை அனைவருக்கும் தர ஏற்பாடு செய்யுங்கள். இந்த உலகளாவிய பெருந்தொற்று குறைய வேண்டுமென்றால், எல்லோருக்குமே தடுப்பு மருந்து கிடைக்கப்பெற்றாக வேண்டும்"

என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் கொரோனாவின் தீவிரமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. `இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம்' எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, எனினும் இந்த வாரத்தில் சாவு எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேற்படி 7 நாட்களில் மொத்தம் 36 ஆயிரத்து 764 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த 20 லட்ச பாதிப்பில் அதிகபட்சமாக 38 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, ஐரோப்பா மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் ஐரோப்பாவில் 27 சதவீத சாவு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ‘ஸ்புட்னிக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மொத்தத்தில் உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று, மனிதர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகிறது.

ரஷ்ய தடுப்பூசி அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, உலகம் முழுவதும் அதற்கான உலகளாவிய தேவைகள் அதிகமாகி வருகின்றது. இதுபற்றி உலக சுகாதார நிறுவத்தினர் கூறும்போது, ``பக்க விளைவுகளை குறைத்து, மேலும் மேலும் சக்தி வாய்ந்தவைகளாக கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் முன்னேறிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும் மேலும் மனித பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலைகளில் உள்ளன. ஆனாலும் தற்போதுள்ள நிலையில் இந்த மருந்துகள் பயன் தரும் என எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. முந்தைய ஆராய்ச்சிகளை ஒப்பிடுகையில் ஒன்றைத்தான் கூற முடியும். சில மருந்துகள் தவறியிருக்கின்றன. சில மருந்துகள் பயனளித்திருக்கின்றன. கொரோனாவுக்கு திறனுள்ள மருந்துகளை கண்டுபிடிக்கும் போட்டி, வளர்ந்த நாடுகளிடையே உள்ளது. இந்த நோயை குணப்படுத்தும் 51 சதவீத அளவிலான திறனுள்ள மருந்துகள், பணக்கார நாடுகளிடம் இருந்து உலக மக்கள்தொகையில் 13 சதவீதம் பேருக்கு கிடைத்துள்ளன. முன்னதாக ஜி20 நாடுகளின் சுகாதார மற்றும் பொருளாதார அமைச்சர்கள், இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ‘5 பணக்கார நாடுகள் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளின் இறுதி நிலைகளில் உள்ளன.

மற்ற நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களிடம், கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் திறன் போதிய அளவில் இல்லை’என உலக அளவிலான ஒரு தன்னார்வல அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துகள் தயார் என்று ஒவ்வொரு நாடும் அறிவித்து வந்த நிலையில், விரைவில் தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வரும், எல்லோரும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் தற்போது ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு பணிகளையும் தொடங்கியுள்ளனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது