தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்த லாக்டவுனில் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருந்த திரைப்பிரபலங்களில் ராஷ்மிகாவும் ஒருவர். படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்தும், சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.மேலும் தனது பண்ணை வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளுடன் கொஞ்சி விளையாடி வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் ரசிகர்களிடம் வீடியோ வாயிலாக உரையாடியுள்ளார் ராஷ்மிகா. அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் மனச் சோர்வுடன் இருந்தால் உடற்பயிற்சி செய்வது தனது வாடிக்கை என்றும் உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தத்தில் இருந்து ரிலாக்ஸ் ஆவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு ஸ்டார் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் அப்போது அந்த அறையில் இருந்த தலையணையின் கவர் மிகவும் அழகாக இருந்ததால் அதனை திருடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எங்களின் இதயங்களை மட்டும் தான் திருடுகிறீர்கள் என்று பார்த்தால் தலையணை உறைகளையும் திருடுகிறீர்கள் என்று கமெண்ட் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தை அசத்தி வருகிறது. 

சுல்தான் திரைப்படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இதுவே இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் படத்தின் 90% படப்பிடிப்பு பணிகள் மற்றும் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டன. மீதமிருக்கும் வேலைகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படம் குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூறியிருப்பதாவது: எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும். இன்னும் ரிலீஸ் குறித்து எந்த திட்டமும் முடிவுசெய்யப்படவில்லை என்று எஸ்.ஆர்.பிரபு குறிப்பிட்டிருந்தார். 

ராஷ்மிகா கைவசம் போகரு என்ற கன்னட படம், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா என்ற திரைப்படமும் ராஷ்மிகா கைவசம் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் எதார்த்தமான குறும்புத்தனமான செயல்களை செய்து ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியாக திகழ்கிறார் ராஷ்மிகா.