``நிவர் புயல் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களில் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்!" என்று அரசியல் தலைவர்கள் பலரும்  வலியுறுத்தி வருகின்றனர். 

அப்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், இதுதொடர்பாக, ``நிவர் புயலால் மக்கள் அஞ்சிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லையென்றாலும் அதையொட்டிப் பெய்த பெருமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய நிவாரணத்தைத் தமிழக அரசு விரைந்து வழங்கிடவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நிவர் புயலால்  கடலோர மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்தும்; விவசாயப் பயிர்கள் சேதமடைந்தும் உள்ளன.

நெற்பயிர், கரும்பு மற்றும் தோட்டப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோழிகள் மற்றும் கால்நடைகளும் பெருமளவில் இறந்துள்ளன. புயலையொட்டிப் பெய்த பெருமழை காரணமாக மீனவர்களும் விவசாயத் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு காலந்தாழ்த்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நிவாரணங்களை விரைந்து வழங்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணத்தை அளிப்பதோடு, குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாகக் கட்டித்தரவேண்டும். மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.  

வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதென்றும்  அது புயலாக உருவெடுக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பரிந்துரைகளின்படித் தமிழக அரசு செய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்" என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், திருமாவளவனை தொடர்ந்து இந்த விஷயம் குறித்தி பேசியிருக்கிறார். அவர் இதுபற்றி கூறும்போது, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை அரசு நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த 26.11.2020 அன்று புதுச்சேரிக்கு 30 கி.மீ. வடக்கில் நிவர் புயல் கரையைக் கடந்தது. புயலுக்கு முன்பும், பின்பும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெய்த பெருமழையாலும், புயலாலும் பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக புயல் வலுவிழந்து அச்சப்பட்ட அளவிற்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.

புயல் கடந்த மரக்காணம் பகுதி அல்லாமல் புதுச்சேரி, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாழாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வாழை, செங்கரும்பு உள்ளிட்டு பல பயிர்கள் வெள்ளத்தால் நாசமடைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நெற்பயிர் வெள்ளத்தால் மூழ்கி அழுகிவிட்டன. வெள்ளாற்றில் நீர்பெருக்கெடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கடலோர பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

2015ம் ஆண்டின் கனமழை, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு நிவர் புயலால் பாதிப்பு இல்லையென்றாலும், சென்னையில் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவான்மியூர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்டு சென்னை மாநகரத்தில் பல பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் சூழ்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பல ஆயிரம் பெருமானமுள்ள மின் சாதனங்கள் நாசமாகியுள்ளன. நிவர் புயலால் மட்டுமல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை மாநகரத்திலும் மற்ற பிற பகுதிகளிலும் வெள்ளம் வீடுகளுக்குள் சென்று மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது. அறிவியல் பூர்வமான நகர்புற திட்டமிடாததே இதற்கு முக்கிய காரணம்.

வெள்ளம் வடிவதற்கான கட்டமைப்பும், பாதாள சாக்கடை கட்டமைப்பும் சரியாக இல்லாத காரணத்தினால் வெள்ளக் காலங்களில் இரண்டும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் இது ஏற்பட்டாலும் சரிசெய்வதற்கான முறையில் மாநில அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.

¨           கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயலால் சாய்ந்த மற்றும் நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்களுக்கு மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி, பாதிப்புகளுக்கேற்ற அளவு  உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்.

¨           வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த பகுதிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநில அரசாங்கம் வீடுகள் கட்டிக் கொள்ளும் அளவிற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

¨           சாய்ந்த மின்கம்பங்களை நிறுவுவதோடு, சாலைகள் பராமரிப்பையும் விரைந்து மாநில அரசு செய்திட வேண்டும்.

¨           இக்காலத்தில் மீன்பிடிக்கச் செல்ல இயலாத மீனவர் குடும்பங்களுக்கும், வேலையிழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் மாநில அரசாங்கம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

¨           வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து ஏற்பட்ட சேதாரங்களையும் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

நிவர் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மத்திய அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். மாநில அரசும் வலியுறுத்திட வேண்டும். மாநில அரசு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.