சின்னத்திரை நடிகர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

பிரபல சின்னத்திரை நடிகை 28 வயதான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதி காலை நேரத்தில், சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. 

அப்போது, தனியார் ஹோட்டலில் நடிகை சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், சித்ராவின் மரணத்துக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாயார் விஜயா உள்பட பலரும் பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்தனர்.

இதனால், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த ஒரு வார காலமாக காவல் துறையினர் தீவிரமாக நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகி இருக்கின்றன. 

அதாவது, நடிகை சித்ரா எவ்வளவு பிரபலமோ, அந்த அளவிற்கு அவர் அதிகமான அளவில் கடன்களும் வாங்கி இருக்கிறார். 

முக்கியமாக, சென்னை திருவான்மியூரில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடு கட்டவும், புதியதாக வாங்கிய சொகுசு காருக்கும் அதிக அளவு கடன் வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்ததால், அவருக்கு கடன் நெருக்கடி மேலும் அதிகரித்து உள்ளது.

இதனால், கடன்களைத் திரும்பச் செலுத்த அதிக அளவில் அவருக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஹேம்நாத்தை திருமணம் செய்துவைக்க விரும்பாத சித்ராவின் தாயார், திருமணத்துக்கான செலவையும் அவரையே பார்த்துக்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் வேலைப்பளு இன்னும் அதிகமாக மாறவே, அவர் கடும் அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அத்துடன், நடிகை சித்ராவுக்கு கணவர் ஹேம்நாத்திடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காததால், அவர் இன்னும் விரக்தி அடைந்ததாகத் தெரிகிறது.

மேலும், ஹேம்நாத்தை முறைப்படி திருமணம் செய்துகொண்டால் போதும் என நினைத்து அவரை முழுவதுமாக நம்பி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில தினங்களில் சித்ராவை, திடிரென நடிக்க வேண்டாம் என்றும், ஆண்களோடு நெருக்கமான காட்சிகள் நடிப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், ஹேம்நாத் அடுத்தடுத்து பிரச்சினை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக, சீரியலில் திருமணப் பேச்சுகள் இருந்த நேரத்தில் முத்தக்காட்சி, முதலிரவு காட்சிகள் என ஆண்களோடு நெருக்கமாக நடிக்க வேண்டிய சூழல் சித்ராவிற்கு நேரிட்டபோது, அப்போது, சித்ராவை தொடர்ந்து சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்து தினமும் அவரோடு ஹேம்நாத் சண்டை போட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, ஆண்களோடு சில காட்சிகளில் நெருக்கமாக நடித்ததற்கு இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள சித்ரா முயற்சித்துள்ளார் என்றும், இதன் காரணமாக சித்ரா அதிகளவில் மன உளைச்சலுக்கும் அடிக்கடி உள்ளானார் என்றும், கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் ஒரு பக்கம் கடன் தொல்லையும், மறு பக்கம் காதல் கணவர் சந்தேக தொல்லையும் என நெருக்கடிகள் அதிகரித்துகொண்டே சென்றதால், கடைசியாக நடந்த படப்பிடிப்பின்போது கணவன் - மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி உள்ளது. 

அப்போது, கணவர் ஹேம்நாத் ஆத்திரத்தில், சித்ராவிடம் செத்து தொலை என்று திட்டிவிட்டு அறையைவிட்டு சென்றுள்ளார். இதனால், மனம் உடைந்த நடிகை சித்ரா, அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஹேம்நாத்திடம் காவல் துறை நடத்திய விசாரணையில் முழுவதுமாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை இந்திய தண்டனைச் சட்டம் 306  இன் படி, காவல் துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். தற்போது, அவர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.