“3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்” என்ற, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இதனால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். 

முக்கியமாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக முகாமிட்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “விவசாயிகளின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை மதித்து, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும்” என்று, அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், “30.11.2020 இந்தியா முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம்  விவசாயப் பெருமக்கள் கடந்த 4 நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று, குறிப்பிட்டு உள்ளனர். 

“இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி மைதானத்திற்குப் போனால் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய பாஜக அரசுக்கு, நாங்கள் அனைவரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும், கூறியுள்ளனர்.

“குறைந்த பட்ச ஆதார விலை” என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு, இயற்றப்பட்ட  வேளாண் சட்டங்களை, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக, விவாதமே இன்றி, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கி, அவர்தம் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பாஜக அரசு” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.

“இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, வேளாண்மையின் உயிர் நாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தையும் பறிக்க வஞ்சகமாகத் திட்டமிடப் படுகிறது என்றும், குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை, விவசாய மண்டிகள் இல்லை, இலவச மின்சாரம் இல்லை, என்று அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து, விவசாயப் பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொண்டுவிட்டது மத்திய அரசு” என்றும், அவர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி உள்ளனர்.

“ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது என்று நேற்றைய தினம் மன் கி பாத் உரையில் பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும் என்றும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது என்றும், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

“பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் டெல்லிக்குச் செல்லும் பல்வேறு வழிகளில் அணி வகுத்துப் போராடி வருகிறார்கள் என்றும், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுக என்றும், குறைந்த பட்ச ஆதார விலை அடிப்படையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

அதற்குப் பதில், “பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை, போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, போலீஸ் தடியடி, டெல்லிக்கு வரும் விவசாயிகளை, ஜந்தர் மந்தரில் இடம் தருகிறோம் என்று பொய் சொல்லி, வேறு மைதானத்திற்குக் கொண்டு போய் அடைப்பது என்று ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் அக்கறையின்றி, அராஜக நடைமுறைகளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, விவசாயிகளை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கருதி, கச்சை கட்டிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்றும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், பகிரங்கமாக எச்சரித்து உள்ளனர்.

இதனால், “ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, 3 வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் நரேந்திர மோடி அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என்றும், அவர்கள் அறிவித்து உள்ளனர்.

“உணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி மனமார முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என்றும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.