முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து, அவர்கள் விடுதலை செய்யப்படலாம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அப்போதே அனுப்பப்பட்டது. எனினும், ஆளுநர் முடிவெடுக்காத காரணத்தால் அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறி நிலவி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார் என்பது, மற்றொரு வழக்காக தற்போது போடப்பட்டது.

அந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 4) விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தரப்பில், ``பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ. எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகுதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கிற்கும் எம்.டி.எம்.ஏ. விசாரணைக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் (நவம்பர் 5), தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருவமான மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் நகலை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரின் அந்தக் கடிதத்தில்,

``தாங்கள் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு- சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் திருமதி நளினி, திருவாளர்கள் வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

ஆனால், அவர்களை விடுவிக்க அ.தி.மு.க, அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ- அந்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ- அல்லது குறைக்கவோ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.  ஆனால், ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரையானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது- அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்- அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஏழு பேரில் ஒருவரான திரு. பேரறிவாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில் "இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014-ஆம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-ன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் - மனுதாரரின் (பேரறிவாளன்) அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக,  தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்”  என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது - உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன. மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே அந்த தோற்றத்தை நீக்கிட, தமிழக அமைச்சரவையின் 9.9.2018–ஆம் தேதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று – திருமதி. நளினி, திருவாளர்கள் வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து - உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்"

என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலினை போலவே, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

``இந்திய சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்தும் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர்.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கோரி வருகின்றன. ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் இவ் விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அந்த எழுவரும் மிக மிக அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" 

என அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தரப்பிலிருந்து இனியாவது வேகமான முன்னேடுப்புகள் எடுக்கப்படும் என எழுவர் விடுதலைக்கான ஆதரவாளர்கள், மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.