கடந்த அக்டோபர் 4 ம் தேதி, பீகாரில் கடைக்கப்பட்ட மாடலை, தேர்தல் நடைமுறைகளைகயே இனி கடைப்பிடிக்க வேண்டும் என்று  அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ``80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் - மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று “தபால் வாக்களிக்கும்” முறை என்ற ‘பாசக் கயிறை’ அறிமுகப்படுத்தி - தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும் - அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான சுற்றறிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிடிருக்கும் அறிக்கையில்,

``தகுதியும் உரிமையும் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளில் உள்ள வெளிப்படையான வாக்குப்பதிவு முறையைச் சீர்குலைக்கும் வகையில், வெளிவந்திருக்கும் சுற்றறிக்கையைப் பார்த்து, சுதந்திரமான நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போர் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து – அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுள்ள கட்சியாக வெற்றி பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நடுநிலையோடு பரிசீலனை செய்து பார்த்ததற்குப் பிறகு, பீகாரில் பா.ஜ.க. கூட்டணியின் வெற்றியே, இன்றைக்கு நாட்டு மக்களின் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.  

தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை, “பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது" என்பதை அறிவிப்பது மட்டுமின்றி, பீகார் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற திரைமறைவு மர்மமும் வெளிப்பட்டு விட்டது!

தேர்தல் ஆணையம் சொல்லும் ‘பீகார் மாடல்’ தேர்தல் என்பது என்ன? பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக,  வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்க, அம்மாநிலத் தேர்தலில் “வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்” (Absentee Voters) என்ற புதிய வகை வாக்குப்பதிவுமுறை கண்டுபிடிக்கப்பட்டுத் திணிக்கப்பட்டது.                       

மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும் இதில்  அடங்குவார்கள். ஆனால் இவர்கள் குறித்த தனி வாக்காளர் பட்டியல் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வயதும், வாக்காளரே தாமாகவே கொடுப்பதுதான். அதற்கு உரிய ஆவணங்களைச் சரிபார்த்து வாக்குப் பட்டியலில் வயது குறிப்பிடப் படுவதும் இல்லை. அதைப் போல,  தேர்தல் ஆணையம் ஒருவரை மாற்றுத் திறனாளி என்று எந்த வகையில் வகைப்படுத்துகிறது என்பதற்கான எவ்வித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.  எல்லாவற்றையும் விட, யார் யாரெல்லாம் இப்படி வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள் என்று முன்கூட்டியே தேர்தல் ஆணையம் ஒரு பட்டியலைத் தயார் செய்து  அறிவிக்காது. இவ்வளவு குழப்பங்களும் குளறுபடிகளும் சந்தேகங்களும் நிறைந்த புதிய “தபால் வாக்களிப்பு” முறையை அறிமுகப்படுத்தி; “80 வயதிற்கு மேற்பட்டோர் எல்லாம் மூத்த குடிமக்கள். அவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்யலாம்” என்று  தேர்தல் ஆணையம் அக்டோபர் 2019-ல் கூறியது.

ஆனால் பீகார் தேர்தலுக்கு  முன்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி, இந்த “80 வயதிற்கு மேல்” என்பதை, “65 வயதிற்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம்” என்று திடீரென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கண்டு, நாடு முழுவதும் ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை வைத்துச் செயல்படும் அனைத்துக் கட்சிகளும் வெகுண்டு எழுந்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த அறிவிப்பைக் கடுமையாக  எதிர்த்தது. நானே 13.7.2020-ல், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல், உள்நோக்கத்துடன், தன்னிச்சையாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். பலத்த எதிர்ப்பின் விளைவாக, 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற அறிவிப்பைக் கைவிட்டு, மீண்டும் “80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் பதிவு செய்யும் வாய்ப்பு “ என்று தேர்தல் ஆணையம் 16.7.2020 அன்று அறிவித்தது. அந்த “பீகார் மாடல்தான்”, பீகாரில் ஜனநாயகத்தின் சுவாசக்காற்றை மாசு படுத்தி, நாடு முழுவதும் இன்றைக்கு பா.ஜ.க.வின் பீகார் தேர்தல் வெற்றி குறித்து மிகப்பெரிய அய்யப்பாட்டை - அதிர்ச்சி தரத்தக்க குற்றச்சாட்டுகளை பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டது.

வாக்களிப்பது ஒருவருடையை ரகசியமான தனிப்பட்ட உரிமை. அதைப் பாதிக்கும் வகையில், நேரடியாகத் தபால் வாக்குச் சீட்டுக்களைக் கொண்டு போய்க் கொடுத்து, வாக்குகள் பதிந்து பெறுவது என்பது, ரகசியமான - சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும், பார்வைக்கு வைக்கப்படும் கடைப் பொருள்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும்.  இதனால், சுதந்திரமான -  நேர்மையான - நியாயமான தேர்தலை,  அடியோடு நாசப்படுத்தும் கடும் விளைவுகள் குறித்துக் கவலைப்படாமல், இந்தியத் தேர்தல் ஆணையமே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான,  இதுமாதிரியொரு திரைமறைவுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்  வாக்களிப்பு முறையை  ஊக்குவிப்பது கவலையளிக்கிறது. போலி வாக்குகள் பதிவு செய்யவும், வாக்காளர்கள் மீது தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு வேண்டிய தேர்தல் அதிகாரிகள்  வாக்குகளைப் பெறவும், ரகசிய வாக்களிப்பு முறையைப் பாழ்படுத்தவும், துணை போகும் இந்த “வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்” முறை, ஆளுங்கட்சிக்கும் - எதிர்க்கட்சிக்கும் இடையில், ஒரு சமமான - நேர்மையான தேர்தல் களத்தை நிச்சயம் உருவாக்காது. தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமகளம் உருவாக்கப்பட  வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முதன்மைப் பணி மற்றும் நோக்கம். அதுதான் ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பாதுகாக்கும் முக்கியப் பணி.

வாக்குச் சீட்டுகளை மூத்த குடிமக்கள் வீட்டிற்குக் கொண்டு செல்லும் “பூத் லெவல் ஆபிசர்” - பிறகு  அதைச் சேகரிக்கப் போகும் தேர்தல்  ஊழியர்கள் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உயிருக்கு என்ன பாதுகாப்பு? என்ன உத்தரவாதம்? அந்த வாக்காளருக்கே இப்படியொரு தொற்று இருந்தால், அங்கு போகும்  தேர்தல் ஊழியர்களுக்கு என்ன பாதுகாப்பு? வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்கிற்காக, தனியாக வாக்குச்சீட்டுகளை அச்சடிப்பது யாருடைய வரிப்பணம்? 

ஆகவே, இந்தப் புதிய தபால் வாக்கு அளிக்கும் முறை, இந்தியத் தேர்தல் ஜனநாயகம் இதுவரை வலியுறுத்தி வந்த “சுதந்திரமான - நேர்மையான” தேர்தலுக்கு விரோதமானது என்பதை விட; மக்கள் வரிப்பணத்தைத் தேவையில்லாமல் விரயம் செய்து, பா.ஜ.க.வுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ, உதவிட முனையும் போக்காகும். சமமற்ற தேர்தல் களத்தை உருவாக்கிட - தேர்தல் முடிவுகளைத் திரித்துச் சிதைத்திட - இந்தியத் தேர்தல் ஆணையமே  களமிறங்குவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்திவிடும். அதுமட்டுமின்றி - மக்களின் விலைமதிப்பற்ற - ரகசிய வாக்குப்பதிவு முறையைச் சவக்குழியில் தள்ளி - புதைத்து விடும் பேராபத்தை ஏற்படுத்தி விடும்.

ஆகவே “வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வராதவர்கள்” என்று கூறி; 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் - மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று “தபால் வாக்களிக்கும்” முறை என்ற ‘பாசக் கயிறை’ அறிமுகப்படுத்தி - தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும் - அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்றும்; அந்த அறிவிப்பை முதலில் கைவிட்டு, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு 3.10.2020 அன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும்; கேட்டுக் கொள்கிறேன்"

எனக் குறிப்பிட்டுள்ளார்.