நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி முதன்முதலாக அரசியல் களம் கண்டது. தற்போது 2021 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளது. கடந்த வாரம் தி. நகரில் உள்ள ஹோட்டலிவ் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள், மண்டல மற்றும் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்திருந்தனர்.

இந்நிலையில், ``சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும்" என்று கமல்ஹாசன் இன்று (நவம்பர் 5) கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர், ``எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டசபையில் ஒலிக்கும்" என கமல்ஹாசன் பதிலளித்தார்.

மேலும் அப்போது அவர் கூறியதாவது:

``நல்லவர்களுடன் கூட்டணி உண்டு. பல கட்சிகளில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் நொந்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வரவேண்டும். கூட்டணி பற்றி இப்போது பேசும் நேரமல்ல. 

பழி போடும் அரசியலாக இல்லாமல், பழி வாங்கும் அரசியலாக இல்லாமல் வழிகாட்டும் அரசியலாக இருக்க வேண்டும் என்று நம்பி நகர்ந்து கொண்டிருக்கிறோம். 

ரஜினியுடன் அரசியல் நிலைப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு நண்பராக அவரது உடல்நிலை முக்கியம். அவர் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிக்க வேண்டும். 

கள ஆய்வின் அடிப்படையிலே தமிழகத்தின் 3 ஆவது பெரிய கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துள்ளது, 100 முதல் 160 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறோம். மாற்றம் வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். குறுகிய கால கட்டத்தில் கட்சியில் ஒரு லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள். அரசியலில் எங்கள் கொள்கை நேர்மை மட்டுமே. 

சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மனு தாக்கல் செய்யும்போது எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று உங்களுகுத் தெரியும். கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்பது எனது மிகப்பெரிய பொறுப்பு. மேலும், தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

மனுஸ்ருதி என்பது புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. 'வேல் யாத்திரை'க்குப் பதிலாக வேலை வாங்கிக்கொடுப்பதே எனது வேலை. இப்போது வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. வரவேற்கிறேன்.

சகாயம் போன்ற நல்லவர்களை எப்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கும். எனக்கு மக்கள் முன்னிலையில் வெளிச்சத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்வேன். எனது கட்சியின் கொடியையும், சின்னத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்வேன்" என்றார். 

நேற்றைய தினம் (நவம்பர் 4) கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, ``திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை" என்று கூறியிருந்தார். 

சமீபத்தில் நடந்த மற்றொரு மீட்டிங்கில் பேசிய கமல்ஹாசன், அப்போது கட்சியினரிடம், ``தமிழகத்துக்கு புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகும் கள வீரர்களாக நீங்கள் வெளியே செல்கிறீர்கள். முதலமைச்சராக அமர்த்துவேன் என்பது ஒரு மனிதனை அல்ல. ஒரு மாற்றத்தை. அதன் கருவிதான் நான். 

இக்கூட்டத்தில் இருக்கும் உங்கள் குரல் சட்டசபையில் கேட்கப் போகிறது. அதற்கான குணாதிசயங்கள் இன்றே வந்தாக வேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று நான் அறிவித்ததாக கூறுகின்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம், தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும். அதை அழிக்க முடியாது. அதனால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை" என்று கூறியுள்ளார்.