பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்றதாகப் புகார் எழுந்ததையடுத்து, சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருந்து வருகிறது. 

இதனால், கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவை மீறி முக்கிய சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது 200 ரூபாய் அபராதம் விதித்தும், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன் படி, தமிழக முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்து, தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஊரடங்கின்போது மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதிக்கு தகவல் கிடைத்து, அவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சட்ட விரோதமாக விற்கப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்களையும் கைது செய்தார்.

இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் எண்ணிக்கையை, சரியாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலும், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த மதுபாட்டில்களை வெளியே கொண்டுவந்து தனியார் நபர்கள் மூலாக கள்ளத் தனமாக விற்பனை செய்ததாகவும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு வந்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினார்.

அப்போது, அந்த காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. 

இந்த நிலையில், அங்கு பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு ராஜா ஆகிய பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களைக் கள்ளத் தனமாக விற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 

“ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ஏட்டு மீதும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.