உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடைபெற்ற நிலையில், ஒரு இடத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் சேலையைப் பிடித்து இழுத்து சிலர் மானபங்கப்படுத்தும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக தற்போது அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்த மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக 75 இடங்களில் போட்டியிட்டு 67 இடங்களைத் தனது வசப்படுத்தியது. இதில், சமாஜ்வாதி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால், நேற்று மனு தாக்கல்கள் முடிந்து உள்ளது. 

அப்போது, லக்னோவிலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சமாஜ்வாதி கட்சி பெண் வேட்பாளர் ஒருவர், வேட்மனு தாக்கல் செய்ய வந்தார். 

அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த  மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் அவருடைய அடியாட்கள் சிலர், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தின் வெளியே சற்று தொலைவில் வந்து நின்றுகொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து, அங்கு வந்த சமாஜ்வாதி கட்சி பெண் வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்ததால், மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் அவரது அடியாட்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார்.  

மற்ற கட்சி வேட்பாளர், அந்த பெண்ணை சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். அத்துடன், அந்த பெண்ணின் சேலையை உருவி, அந்த பெண்ணை கடுமையாக மானபங்கப்படுத்தி உள்ளனர். 

மேலும், அந்த மாநிலத்தில் நேற்றைய தினம் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளது. 

இப்படியாக, 14 மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும், சமாஜ்வாதி கட்சி பெண் வேட்பாளர் சேலையை உருவி, மானபங்கப்படுத்தியது தொடர்பான காட்சிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “பெண் வேட்பாளரைத் தாக்கியவர்கள் பாஜக தொண்டர்கள் என்றும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பதவி ஆசை கொண்ட  குண்டர்கள்” என்றும், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அதே போல், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவும், இந்த வன்முறை வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் டேக் செய்து பகிர்ந்து உள்ளார். 

அதில், “பிரதமர் மற்றும் முதலமைச்சரே; வெடிகுண்டுகள், கற்கள் மற்றும் தோட்டாக்களைப் பயன்படுத்திய உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உங்கள் 
தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும், அவர்கள் வேட்பு மனுக்களைப் பறித்து பத்திரிகையாளர்களை அடித்து, பெண்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள்” என்றும், கடுமையாக விமர்சித்து உள்ளார். 

குறிப்பாக, “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது” என்றும், பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.