“மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் கணவனிடம் இருந்து, மனைவி விவாகரத்து கோரலாம்” என்று, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஒருவருக்கு, கடந்த 1995 ஆம் ஆண்டு அது பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது மகளை முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளார். 

அதன் படி, தனது மகள் திருமணத்திற்கு ஒரு வீடு, கார், 501 சவரன் தங்க நகைகளை மாப்பிளைக்கு அவர், வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார். 

ஆனால், ரியல் எஸ்டேட் அதிபரான அவருக்கு, தொடர்ச்சியாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனக்கு மகளுக்காக மேலும் 77 லட்சம் ரூபாய் பணத்தை, அவரது பெற்றோர் கொடுத்து உதவியிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தான், திடீரென ரியல் எஸ்டேட் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளளது. 

இதனால், ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி, அங்குள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். 

அத்துடன், தனது விவாகரத்து மனுவில், “எனது விருப்பமின்றி எனது கணவர், என்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுகிறார் என்றும், என்னை உடல் மற்றும் மன ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பெண்ணின் மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கடந்த 2009 ஆம் ஆண்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் அதிபரான அந்த பெண்ணின் கணவர், மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகமது முஸ்டாக் மற்றும் கவுசர் எடப்பாகத் முன்பு தற்போது விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரால் அவரது மனைவி கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக தெரிவித்தார் என்றும், மனுதாரரின் தாயார் மறைந்த நாளில் கூட தனது மனைவியை கட்டாயப் படுத்தி உடலுறவு கொண்டார்” என்றும், வாதிட்டிருக்கிறார்.

அத்துடன், “ அவரது மனைவி, நோய்வாய்ப்பட்டு இருந்த நாட்களில் கூட, உடலுறவு கொண்டார் என்றும், மகளின் முன்னால் கூட தனது மனைவியுடன் மனுதாரர் பாலியல் வல்லுறவி ஈடுபட்டார்” என்றும், மிக கடுமையாக வாதிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனைவியின் விருப்பமின்றி அவரது கணவர் வல்லுறவில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும், மனைவியின் விருப்பத்தையும் உணர்வுகளை அவரது கணவர் மதிக்கவில்லை என்றும், தனது மனைவியின் உடல் தனக்கு சொந்தம் என்ற எண்ணத்தில் அவரது கணவர் இருந்துள்ளார்” என்றும், சுட்டிக்காட்டினர்.

மேலும், “நவீன சமூக நீதித்துறையில் அப்படி எந்த எண்ணத்திற்கும் இடமில்லை என்றும், இருவரும் சமம் என்ற நிலையே உள்ளது என்றும், ஆதலால் மனைவி மீது எவ்வித எதேச்சதிகாரத்தையும் கணவர் கோர முடியாது என்றும், மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர், மனைவி மீது செலுத்தும் வல்லுறவே Marital rape என்றே கருதப்படும்” என்றும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக, “மனைவியின் சுய உரிமையை மதிக்காமல் அவர் மீது உரிமை செலுத்த முயன்ற கணவரின் செயல் வல்லுறவாக கருதப்படும் என்றும், இதனை காரணமாக காட்டி விவாகரத்து கோரலாம்” என்றும், நீதிபதிகள் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 

கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.