குஜராத்தில் 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் ஒருவன், அந்த சிறுமியை துண்டுத் துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலம் தாத்ரா நகர் ஹவேலி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அத்துடன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் அந்த சிறுமி படித்து வந்தார். 

இப்படியான நிலையில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி கடந்த தினங்களுக்கு முன்பு திடீரென்று மாயமாகி உள்ளார். இதனால், கடும் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி காணாமல் போனது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பெயரில் நடந்துகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ஒரு இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர் முன்னுப் பின் முரணமாக பதில் அளித்து உள்ளார்.

இதனையடுத்து. அந்த இளைஞரின் வீட்டை போலீசார் அதிரடியாகச் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வீட்டின் கழிவறை அருகே ரத்தக் கறையுடன் ஒரு சாக்கு மூட்டை இருந்து உள்ளது. அந்த மூட்டையைத் திறந்து பார்த்ததும், அதில், மாயமான 4 வயது சிறுமியின் உடல் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனால், பதறிப்போன போலீசார், அந்த இளைஞனை தங்களது பாணியில் விசாரிக்கத் தொடங்கினார்கள். இந்த விசாரணையில், “சிறுமியை ஆசை வார்த்தைகளால் கூறி கடத்தி வந்து, தனது வீட்டில் அடைத்து வைத்து வெறித்தனமாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பிறகே சிறுமியை துண்டுத் துண்டாக வெட்டி இந்த சாக்கு மூட்டையில் கட்டியதாக” வாக்கு மூலம் அளித்து உள்ளான்.

இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், அந்த உடல் பாகங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், குற்றவாளியிடம் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி துண்டுத் துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட தகவலை கேள்விப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஒருவர், பினாயில் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.