பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் ஆதரவு மாநிலங்களில் தொடர்ந்து மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 24 மாநிலங்களில் பசுவதைக்கு சட்ட ரீதியாகவும் கால்நடை பராமரிப்பு விதிகள் மூலமாகவும் தடை உள்ளது.  இதனையொட்டி கர்நாடகாவில் பசுக்களை விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொல்லப்படுவதோ சட்ட விரோதமானது என மசோதாவை கர்கநாடக அரசு நிறைவேற்றியுள்ளது. புதிய சட்ட மசோதாவின் பிரிவு (1)(2) ஆகியவற்றில் கால்நடை என்பது பசு, பசுக்கன்று என்று கூறப்பட்டுள்ளது.


பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு, அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்தக் கட்டத்தில் மட்டுமே அது வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது. உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரி எந்தவொரு இடத்திலும் சோதனை நடத்தலாம் எனவும் குற்றம் செய்யும் நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும் சிறைக்காவலுடன் 50 ஆயிரம் முதல் 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. 


ஏற்கெனவே  கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளபோதும், அதில் குற்றம் செய்வோருக்கு தண்டனை, அபராதம் உள்ளிட்டவை போதுமானதாக இல்லை. அதனால் தான் தண்டனை  கடுமையாக்கும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என அம்மாநில அரசு கூறுகிறது.


இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதவை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் இப்புதிய சட்டத்தில் கால்நடை இறைச்சி என்பது மாட்டிறைச்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எருமை மாட்டை வெட்டி இறைச்சித் தேவைக்கு பயன்படுத்த தடையில்லை. ஆனால் 12 வயதுக்கு மேற்பட்ட எருமைகள் அல்லது இனப்பெருக்கத்துக்கோ பால் சுரக்கவோ தகுதியற்றதாக கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட எருமைகள் மட்டுமே வெட்டப்படலாம் என்று அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு செளஹான் தெரிவித்திருக்கிறார்.