ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Daily news

ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், பெரிதாக அச்சப்பட தேவையில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ma subramaniyan

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த ஒமைக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

மேலும் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டன. இருப்பினும், இந்தத் தடை உத்தரவு பெரியளவு பலன் அளித்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு, குஜராத், டெல்லி மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு துவக்கம் செய்யப்பட்டுள்ளது. 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், 35 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: கொரொனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமைக்ரான் 38 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.  தமிழகத்தில் இதுவரை ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து 28 விமானங்கள் நாள்தோறும் வருகின்றன. மற்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களை சேர்த்து மொத்தம் 170 வெளிநாடு விமான போக்குவரத்து நாள்தோறும் உள்ளது. ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரில் இதுவரை 5249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 7 பயணிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வருகிறோம். அதில் 6 பேருக்கு ஏற்கனவே டெல்டா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பேர் நாகர்கோவில் மருத்துவமனையிலும், 4 பேர் கிங்ஸ் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டு கண்காணிப்பில் தனிமை படுத்திகொண்டு இருக்கிறார்கள்.

ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை இருந்தாலும், பெரிதாக அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் 80.44% முதல் தவணையும், 47.46% 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல் சனிக்கிழமை 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட படுக்கைகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது தொடர்பாக அங்கு ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம். அந்த 3 மாவட்டங்களில் சேர்ந்த நிர்வாகிகளை இணைத்து அங்கு ஒரு பொறுப்பாளர்களை நியமித்து அங்குள்ள பொதுமக்களை தடுப்பூசி போட வைப்பதற்கு ஏற்பாடு செய்ய  இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும்  பொதுவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் 7 நாட்களும், அதன் பின் 7நாட்கள் வீட்டில் என மொத்தம் 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Comment