தன்னைப் பற்றி மிகவும் கேவலமாகவும் இழிவுபடுத்தும் விதத்திலும் பேசிய மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் சினிமாவில் வில்லனாக நடிப்பது குறித்தும் நடிகை திரிஷா குறித்தும் அருவருக்கத் தக்க வகையில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சினிமாவில் வில்லனாக நடிக்கும் போது கதாநாயகிகளோடு படுக்கையறை காட்சி பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என்பது போல அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் நடிகை திரிஷாவை குறிப்பிட்டு மன்சூர் அலிகான் பேசியது திரை துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதை அடுத்து நடிகர் மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு, “சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு!” என பதிவிட்டு இருக்கிறார். நடிகை த்ரிஷாவின் அந்த பதிவு இதோ…

இந்த விஷயத்தை அறிந்த உடனே அது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள், நடிகர் மன்சூர் அலிகான் என்ற பேச்சை கண்டிக்கும் விதமாக தனது X பக்கத்தில், “திரு. மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தேன்.நாங்கள் அனைவரும் ஒரே அணியில் வேலை செய்தோம். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை எந்தத் துறையிலும் பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும், இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்.” என தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த பதிவு இதோ…

Disheartened and enraged to hear the misogynistic comments made by Mr.Mansoor Ali Khan, given that we all worked in the same team. Respect for women, fellow artists and professionals should be a non-negotiable in any industry and I absolutely condemn this behaviour. https://t.co/PBlMzsoDZ3

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 18, 2023

ஒருபுறம் இந்த சர்ச்சைகள் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், நடிகர் மன்சூர் அலிகான் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் குறித்து தன் தரப்பு விளக்கத்தையும் தற்போது வெளியிட்டிருக்கிறார். ஆனால் அவர் எந்த விதமான விளக்கம் கொடுத்தாலும் அவர் பேசிய விஷயமும் பேசிய விதமும் நிச்சயமாக ஏற்புடையது இல்லை என்றும் இதற்காக அவர் எந்தவிதமான விளக்கமும் இன்றி மனம் வருந்தி முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.