தளபதி விஜயின் லியோ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்த சாண்டி மாஸ்டர் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்தது. கன்னடத்தில் தயாராகும் இந்த படத்திற்கு ரோசி என பெயரிடப்பட்டுள்ளது. அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராகும் இந்த ரோசி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரமாக ஆண்டாள் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் யோகேஷ் மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் இந்த ரோசி திரைப்படத்திற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராகவும் பணியாற்றுகிறார். இயக்குனர் ஷூன்யா எழுதி இயக்கம் இந்த ரோசி திரைப்படத்திற்கு குரு கிரண் இசை அமைக்கிறார். SK.ராவ் ஒழிப்பதிவில் ஹரிஷ் கோமி படத்தொகுப்பு செய்யும் ரோசி படத்தின் வசனங்களை மாஸ்த்தி எழுதியிருக்கிறார் வினோத் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். கதையின் நாயகனாக நடிக்கும் கன்னட நடிகர் யோகேஷ் தனது திரை பயணத்தில் 50வது படமாக நடிக்கும் படம் இந்த ரோசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமான ஜாலியான சாண்டி மாஸ்டரை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஒரு சீரியசான நடிகராக மாற்றிக் காட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த ரோசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். தனது X பக்கத்தில், “ரோசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதை விட பெரிய மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை. சாண்டி பிரதர் இந்தப் புதிய பாதையில் ஒரு நடிகராக உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி! உங்களுக்கும் ரோசி திரைப்படத்தின் மொத்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு ரோசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரமான சாண்டி மாஸ்டர் தனக்கென தனி பாணியில் கலக்கலாக நடனமாடி நடன இயக்குனராகவும் நடன கலைஞராகவும் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் நடிகராக புதுப் பாதையை தேர்ந்தெடுத்த சாண்டி மாஸ்டர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமான 3:33 எனும் படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார். இதனை அடுத்து சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தில் ஒரு மிரட்டலான சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். "சாக்லேட் காபி" கேட்கும் சாண்டி மாஸ்டரின் அந்த மிரட்டலான கதாபாத்திரம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது. மிகப்பெரிய வரவேற்பை லியோ திரைப்படம் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து தற்போது நடிகராக தனது அடுத்த அவதாரமாய் கன்னட சினிமாவில் ரோசி படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகிவிட்டார் சாண்டி மாஸ்டர். கன்னட மொழியில் தயாராகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பேன் இந்தியா படமாக தயாராகும் இந்த ரோசி திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் தொடர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.