தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களான ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அவருடைய அடுத்த படைப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இப்படத்தில் அவருடன் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியார் பிக்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையும் அந்த பெண் சந்திக்கும் சூழலையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. மேலும் நிச்சயம் இப்படம் வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது. அதே நேரத்தில் ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாமிய மதத்தினரின் நம்பிக்கையை இழிவு செய்யும் வகையில் உள்ளது என இப்படத்திற்கு எதிர்ப்பும் எழுந்தது. இப்படத்தை தடை செய்யக்கோரி சில ஆரப்பாட்டங்களும் நடந்தது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஃபர்ஹானா திரைப்படம் நாளை மே 12 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்று வரை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் படத்திற்கு எழுந்த சர்ச்சைகள் குறித்தும் ஃபர்ஹானா படம் குறித்தும் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஒரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல. அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள்

இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே ஃபர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம்..” என்று சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்து ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஃபர்ஹானா படக்குழு சார்பில் விளக்கமளித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. தற்போது இந்த அறிக்கை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.