தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய திரைப்படம் என்றாலே 2012 ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீட்சா. குறைந்த பொருட்செலவில் நல்ல கதையை கொடுத்து பெரிய அளவு வசூல் பெற முடியும் என்ற பாதையை வகுத்த திரைப்படம் என்ற பெருமையை கொண்டுள்ளது. வித்யாசமான திரைக்கதையில் வெளியாகி பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் பீட்சா. பேய் பட கதையில் வித்யாசம் காட்டி ஒரு டிரெண்ட் செட் செய்து மக்கள் ஆதரவை பெற்றது. அதன் பின்னரே தமிழ் சினிமா குறைந்த பட்ஜெட்டில் அதிகம் வசூல் ஈட்டும் யுக்தியில் கவனம் செலுத்தியது. குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற இன்றைய பிரபலங்களை கொடுத்த படமும் அதுதான்.

மேலும் பீட்சா படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம். அதாவது படத்தின் கிளைகதையாக இல்லாமல் வேறு ஒரு கதைகளத்தில் பீட்சா பாகம் 2 ‘வில்லா’ என்ற பெயரில் 2013 ம் ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக பெரும் வெற்றியை அடையவில்லை என்றாலும் கதை என்னவோ பீட்சா படம் போல் வித்யாசமாக ரசிக்க கூடியவையாக இருந்தது. இந்த படத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் இருந்தது. தற்போது பத்து ஆண்டு கழித்து பீட்சா தொடரில் மூன்றாவது பாகம் ‘தி மம்மி’ என்ற பெயருடன் இணைந்துள்ளது. முந்தைய பாகங்கள் போல் இந்த படமும் வித்யாசமான உணர்வை தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சிவி குமார் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின் காக்கமனு பவித்ரா மாரிமுத்து, காளி வெங்கட், கெளரவ் நாராயணன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய அருண் ராஜ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ‘பீட்சா தி மம்மி’ படத்தின் மூன்றாவது பாகத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. மேலும் படத்திலிருந்து மின்னல் கண்ணிலே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான கண்ணே கண்மணியே பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.லலிதா சுதா குரலில் மோகன் ராஜா வரிகளில் தாய்மை உணர்த்தும் பாடலாக வெளியாகி உள்ள ‘கண்ணே கண்மணியே’ பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் கேட்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.